Tuesday, May 29, 2018

பெற்றோர்களின் கவனத்திற்கு | பள்ளி செல்லும் குழந்தைகள்

பள்ளி செல்லும் குழந்தைகளுடைய பெற்றோர்களின் கவனத்திற்கு !!

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோர்களின் கடமையே ஆகும். இதை நீங்கள் சரியாக செய்து விட்டாலே போதும் உங்களின் குழந்தைகள் நீங்கள் நினைத்ததை விட வாழ்வில் சிறந்து விளங்குவார்கள். அதற்கு சில உதாரணத்தை இங்கு பார்க்கலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியவை :

பொதுவாகவே ஒரு சில குழந்தைகள் அடம்பிடிக்காமல் பள்ளிக்கூடம் சென்று விடுவார்கள். ஆனால், சில குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள். அந்த குழந்தைகளிடம், பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் ஆசிரியர் அடிப்பார்கள் என்று அவர்களை பயம் காட்டக்கூடாது. ஏனெனில், இவ்வாறு பயம்காட்டினால் ஆசிரியர்கள் நம்மை அடித்து துன்புறுத்துவார்கள் என்ற தவறான எண்ணம் அவர்களுக்குத் தோன்றும். எனவே, அவர்களின் மனதில் ஆசிரியர்களை பற்றிய தவறான எண்ணத்தை விதைக்காதீர்கள்.
மேலும், குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றால் அவர்களை அடித்து மிரட்டாமல், எந்த பாடம் புரியவில்லை என்று கேட்டு அவர்களுக்கு அன்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பெற்றோர்களே சிறந்த வழிகாட்டி :
பெற்றோர்கள் தங்களின் சிறுவயதில் மருத்துவராகவோ, ஆசிரியராகவோ என ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசைக் கொண்டிருப்பார்கள். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்களின் ஆசை நிறைவேறாமல் இருந்திருக்கலாம். எனவே அந்த நிறைவேறாத ஆசைகளை குழந்தைகளின் மீது திணித்து நீ மருத்துவராக வேண்டும் அல்லது நீ ஆசிரியராக வேண்டும் என்று சொல்லக்கூடாது.

உங்கள் குழந்தைகளின் ஆசையை தெரிந்து கொண்டு அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருங்கள். அவர்களின் இலட்சியத்தை அடைவதற்கு ஊக்குவியுங்கள்.
 
தொகுப்பு : பாபு நடேசன்

Friday, May 25, 2018

குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டை அறிந்து கொள்வது எப்படி? | 5 வயது

பொதுவாக அவர்கள் தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை மிகவும் அருகில் சென்று பார்ப்பதுடன், புத்தகங்களையோ, பத்திரிகைகளையோ தொடர்ச்சியாக வாசிக்கும்போது கண் எரிகின்றது, கண்களிலிருந்து நீர் வருகின்றது, கண் வலிக்கின்றது எனச் சொல்வார்களேயானால் அவர்களின் கண்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதுடன் உடனே ஒரு கண் வைத்தியரை நாடுவதே மிகவும் சிறந்தது.

 ஏன் இதனை நாம் இவ்வளவு அழுத்தமாக சொல்கின்றோம் என்றால், குழந்தைகளைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் கண் நரம்புகள் 12 அல்லது 13 வயதிற்குப் பின்னர் வளர்ச்சியடைவதில்லை. 
 
குறிப்பிட்ட அந்த வயதுக்குப் பின்னர் புதிதாக கண் நரம்புகள் வளராமல், ஏற்கனவே வளர்ச்சியடைந்த நரம்புகளே அதன் அளவில் பெருத்துக் கொண்டு போகும். 

எனவே கண் நரம்புகள் புதிதாக வளர்ச்சியடைகின்ற காலப்பகுதிக்குள் அதாவது ஆகக் கூடியது 13 வயதிற்குள், உங்கள் குழந்தைகளின் கண்களின் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருக்குமாயின், அதனை நிவர்த்தி செய்து கொள்வதுடன் அவர்களுக்கு மீண்டும் பார்வையை பெற்றுக் கொடுப்பது மிகவும் இலகுவானதாக இருக்கும்.

அதுவரை காலமும் நீங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பிற்காலத்தில் பார்வையை பெறுவதற்காக அவர்கள் பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.

ஆகவே உங்கள் குழந்தைகளின் கண்களுக்கு ஒளியூட்டி அவர்களுக்கு பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களான உங்களின் பொறுப்பாகத் தான் இருக்கின்றது.

 பார்வை சரியாக இருந்தால் தான் எம்மால் மிகச் சரியாக இயங்க முடியும். எனவே குழந்தைகளின் கண்களில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் கண்களை சரியாக அவதானித்து வருவீர்களேயானால், இளம் பராயத்திலேயே குழந்தைகள் தம் பார்வையை இழக்கும் பேராபத்தை தடுத்து நிறுத்தலாம்.
 
பதிப்பக நன்றி :மாலைமலர் 
தொகுப்பு : பாபு நடேசன்