Wednesday, May 25, 2016

குழந்தைகளிடம் பொம்மைகளைத் தராதீர்கள்..! | இது ஒரு எச்சரிக்கை பதிவு!

குழந்தைகளிடம் பொம்மைகளைத் தராதீர்கள்..! | நன்றி கூட்டாஞ்சோறு



இது ஒரு எச்சரிக்கை பதிவு!

குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக பல வண்ணங்களிலும் பல மாடல்களிலும் ஏராளமான பொம்மைகள் கிடைக்கின்றன. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நாமும் தொடர்ந்து இத்தகைய பொம்மைகளை வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். 

குழந்தைகள் விளையாடும் இந்த பொம்மைகள் 'பி.வி.சி.' என்று சொல்லப்படுகிற 'பாலிவினைல் குளோரைடு' என்ற பொருளில் இருந்து தயாரிக்கிறார்கள். பாட்டில், நிப்பிள், ரப்பர் வாத்துக்கள், பல் முளைக்கும் போது கடிப்பதற்காக கொடுக்கப்படும் சிறு விளையாட்டுப் பொருட்கள் என எல்லா வகையறாக்களும் இந்த பொருளால் தயாரிக்கப்படுபவைதான். 


பி.வி.சி. என்பது சாதாரணமாக வளையும் தன்மை கொண்ட பொருள் கிடையாது. அதனால், இந்த பி.வி.சி.-யை வளைப்பதற்காக இதனுடன் 'பதாளேட் பிளாஸ்டிஸைசர்' என்கிற ஒரு பொருளை சேர்கிறார்கள். இது சேரும் போது பிவிசி வளையும் தன்மையை பெறுகிறது. இப்படியாக வளையும் தன்மைக் கொண்ட 'வினைல் பொருட்கள்' பல ஆண்டுகளாக உடையாமலும் வண்ணம் மாறாமலும் இருக்கும். 


வளைப்பதற்காக சேர்க்கப்படும் 'பதாளேட்' என்ற பொருள் விளையாட்டுப் பொருட்களின் எடையில் பாதியளவு கலந்திருக்கும். இது பிவிசியுடன் வேதி முறையில் இணைக்கப்படுகிறது. பதாளேட் பொருட்களை குழந்தைகள் வாயில் கடித்து விளையாடினால் அது கசிந்து வாய்க்குள் போகும். பிளாஸ்டிஸைசர் குழந்தைகளின் எச்சிலில் கரையக்கூடியது.


இப்படி கரைந்த பிளாஸ்டிஸைசர்கள் ரத்தம், நுரையீரல், கல்லீரல் போன்ற இடங்களில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இது எண்ணெய் மற்றும் கொழுப்பிலும் கரையக்கூடியது. பிளாஸ்டிஸைசர் தரும் தீமைகள் பற்றி ஏராளமான ஆய்வுகள் இருக்கின்றன. அவற்றின் முடிவுகள் படி இந்த வேதிப் பொருட்கள் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் புண்களை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது. மேலும் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்னையை ஏற்படுத்தும். விந்து உருவாவதிலும் கருமுட்டை உருவாக்கத்திலும்  இடையூறு செய்யும். கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இடங்களில் கேன்சரையும் 'மோனோநியூக்கிளியர் செல்லுக்கேமியா'வையும் உருவாக்குவதாக தெரிவிக்கிறது.


குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த தீமைகளை கண்டபின்னாவது அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து பிவிசி மூலம் தயாரிக்கப்படும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை நிறுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பெரும் கெடுதல் தருகிற 'வினைல்' மற்றும் 'பிளாஸ்டிஸைசர்' உபயோகப்படுத்துவதை தயாரிப்பு நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப் பெற்று வருகின்றன. கூடுமானவரை நாம் நமது குழந்தைகளுக்கு பிவிசி விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பதே நல்லது. நம் குழந்தைகளுக்கு நாம் தரும் ஆரோக்கியம் அது. 



நன்றி கூட்டாஞ்சோறு